இந்த வலைப்பதிவில் தேடு

Translate

வெற்றிலை சாகுபடி: குறைந்த முதலீட்டில் ஆண்டு முழுவதும் வருமானம் தரும் ‘பசுமைத் தங்கம்’!

 வெற்றிலை சாகுபடி மற்றும் விற்பனை

வெற்றிலை கொடி

     வெற்றிலை ஓர் அறிமுகம்

     வெற்றிலை (Betel Leaf) என்பது பைபர் ஏசியே (Piperaceae) குடும்பத்தை சேர்ந்த, படரும் கொடி வகை தாவரம். இதன் அறிவியல் பெயர் பைபர் பீட்டல் (Piper Betle) ஆகும். இது இந்தியா துணை கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டது. இந்த செடியின் இலைகள், குறிப்பாக அதன்  மருத்துவ குணங்கள் மற்றும் சடங்குபயன்பாடுகளுக்காக பரவலாக அறியப்படுகின்றன.

     வெற்றிலை இந்திய பயன்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வரலாற்று ரீதியாக, இது அரச சடங்குகள், விருந்துகள் மற்றும் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தியாவில் விருந்தினர்களை வரவேற்க்கும்போதும், சுப காரியங்களிலும், கோவில் வழிபாடுகளிலும் வெற்றிலை பயன்படுத்தப்படுவது ஒரு பாரம்பரிய வழக்கமாகும். தாம்பூலம் தரிப்பது ஒரு முக்கிய சடங்காக இருந்து வருகிறது.

    இது ஒரு லாபகரமான வேளாண் சார்ந்த சிறு தொழிலாக திகழ்கிறது. அதே சமயம் வெற்றிலையை விற்பனை செய்தல், பாக்கு வெற்றிலை தயார் செய்தல், மற்றும் வெற்றிலையிலிருந்து மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உருவாக்குதல் போன்ற சிறு தொழில் வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.

     வெற்றிலை சிறு தொழில், பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறையினருக்குப் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

     இப்பதிவில் வெற்றிலை சாகுபடி மற்றும் விற்பனை செய்யும் முறைகளைப் பற்றி விரிவாக காண்போம்.

➊. வெற்றிலை சாகுபடி

     வெற்றிலை வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல காலநிலைகளில் செழித்து வளரும். இது செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் பயிரிடப்படுகிறது. அகத்தி மரங்கள் அல்லது பிற ஆதாரங்களை ஊன்று கோலாகப் பயன்படுத்தி கொடிகள் படர விடப்படுகின்றன. வெற்றிலைக்குத் தொடர்ச்சியான ஈரப்பதமும், மிதமான சூரிய ஒளியும் தேவை.

 வெற்றிலை வகைகள்:

     இந்தியாவில் பல வகையான வெற்றிலைகள் உள்ளன. அவற்றில் சில:
  ♦ நாட்டு வெற்றிலை
  ♦ வெள்ளை வெற்றிலை
  ♦ கல்கத்தா வெற்றிலை
  ♦ கும்பகோணம் வெற்றிலை
  ♦ ஆத்தூர் வெற்றிலை (தூத்துக்குடி மாவட்டம், புவிசார் குறியீடு பெற்றது)
  ♦ சின்னமனூர் வெற்றிலை போன்றவை பிரபலமான வகைகள்.

 பயிரிடும் முறை:

  ♦ பருவம்: ஜூன்-ஜூலை மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற மாதங்கள்.
  ♦ நிலம் தயாரித்தல்: நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும். பின்னர் 1 மீட்டர் அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும்.
  ♦ அகத்தி மரங்கள் நடுதல்: வெற்றிலை கொடிக்கு ஆதாரமாக அகத்தி மரங்களை நடவு செய்ய வேண்டும். அகத்தி விதைகளை தை-பங்குனி, ஆனி-ஆவணி மாதங்களில் விதைக்கலாம்.
  ♦ வெற்றிலைக் கொடி நடுதல்: அகத்திச் செடிகள் சுமார் அரை அடி உயரம் வளர்ந்த பிறகு, வெற்றிலைக் கொடியை பதியம் போட்டு, ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் 1 அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும். தாய் கொடியின் நுனியிலிருந்து முதல் மூன்று அடி வரை நறுக்கி, அதனை மூன்று துண்டுகளாக்கி நடவு செய்யலாம். விதைக்கொடிகளில் 4-5 கணுக்கள் இருக்க வேண்டும்.

 பராமரிப்பு:

  ♦ கொடி படரும்போது, அகத்தி மரங்களின் பக்கக் கிளைகளை 2 மீட்டர் உயரத்திற்கு அகற்றிவிட வேண்டும்.
  ♦ கொடிகள் சுமார் ஒரு மாதத்தில் முளைத்து படரத் தொடங்கும். அப்போது, வாழை நார்கள் கொண்டு 15 முதல் 20 செ. மீ இடைவெளியில் கொடிகளை ஆதாரத்துடன் கட்ட வேண்டும்.
   ♦ பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம். சில சமயங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கலாம்.

 அறுவடை:

  ♦ அறுவடை செய்த வெற்றிலையை நிழலான இடத்தில் வைக்கவும்.

➋. விற்பனை முறைகள்

     வெற்றிலையை இரண்டு முக்கிய வழிகளில் விற்பனை செய்யலாம்:

 2.1  மொத்த விற்பனை (Wholesale):

 ♦ மண்டிகள்/சந்தைகள்: விவசாயிகள் தங்கள் வெற்றிலையை நேரடியாக வெற்றிலை சந்தைகள் அல்லது மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். இந்த சந்தைகளில் ஏலம் விடுவதற்கென புரோக்கர்கள் இருப்பார்கள். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து வெற்றிலையின் தரத்தை பார்த்து ஏலம் கேட்பார்கள்.

  ♦ மொத்த வியாபாரிகள்: நேரடியாக மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வது மற்றோரு முறை. இவர்கள் கிராமங்களிலிருந்தே வெற்றிலையை கொள்முதல் செய்து, பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்புவார்கள். வெற்றிலையானது "கவுளி", "கூடை", "முட்டி", "சுமை" போன்ற அளவுகளில் கணக்கிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக 102 வெற்றிலைக் கொண்டது ஒரு கவுளி, 20 கவுளிகள் கொண்டது ஒரு கூடை, 104 கவுளிகள் கொண்டது ஒரு சுமை.

 2.2 சில்லறை விற்பனை (Retail):

   ♦ நேரடி கடைகள்: வெற்றிலையை பீடா கடைகள், பூஜை பொருட்கள் விற்கும்  கடைகள் அல்லது சிறிய பலசரக்கு கடைகளில் சில்லறையாக விற்பனை செய்யலாம்.

  ♦ விசேஷ நிகழ்வுகள்: திருமணம், கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வெற்றிலைக்கு நல்ல தேவை இருக்கும். இந்த சமயங்களில் நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

  ♦ ஆன்லைன் விற்பனை: வெற்றிலை எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆன்லைன் சில்லறை தளங்கள் மூலம் விற்பனை செய்யபடுகின்றன. வெற்றிலையை நேரடியாக ஆன்லைன் விற்பது இன்று பரவலாக இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

➌. சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம்

  ♦ தரமான வெற்றிலை: வெற்றிலையின் தரம், நிறம், வாசனையாக இருப்பது அதன் விலையையும் தேவையையும் தீர்மானிக்கும். சிறந்த தரமான வெற்றிலையை அளிப்பது வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

  ♦ விலை நிர்ணயம்: சுப முகூர்த்த நாட்கள் விசேஷ நாட்கள் மற்றும் மழை நாட்களில் வெற்றிலையின் விலை அதிகரிக்கும். மற்ற நாட்களில் விலை குறைவாக இருக்கும். சந்தையின் போக்கை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் விற்பனை செய்வது லாபத்தை அதிகரிக்கும்.

  ♦ சுகாதாரம்: வெற்றிலையை பறித்த உடனேயே, அதை சுத்தமாக பேக் செய்து, Freshness குறையாமல் சந்தைக்கு கொண்டு செல்வது முக்கியம்.

  ♦ வாடிக்கையாளர்கள் உறவு: மொத்த விற்பனையாக இருந்தாலும் சரி, 
சில்லறை விற்பனையாக இருந்தாலும் சரி, வியபாரிகளுடனும், வாடிக்கையாளர்களுடனும் நல்லுறவை பேணுவது தொடர் வியாபாரத்திற்கு உதவும்.

➍. வெற்றிலையின் தேவை

     வெற்றிலையின் தேவை இந்திய கலாச்சாரத்தில், குறிப்பாக தமிழ் நாட்டில், பல ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகிக்கிறது.
     
  ♦ சடங்குகள் மற்றும் மரபுகள்: திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள், பூஜை வழிபாடுகள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளில் தாம்பூலமாக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. இது மரியாதை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

  ♦ மருத்துவ பயன்கள்: வெற்றிலைக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. செரிமானத்திற்கு உதவுதல், வாய் துர்நாற்றத்தை நீக்குதல், கிருமிகளை அழித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் இதில் அடங்கியுள்ளன.

  ♦ பீடா: இந்தியாவில் பீடா தயாரிப்பிலும் வெற்றிலை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது வெற்றிலையின் ஒரு முக்கிய நுகர்வு முறையாகும். 

 ➎. முதலீடு மற்றும் லாபம்: 

 வெற்றிலை சாகுபடி என்பது ஆரம்பத்தில் சற்று உழைப்பையும் முதலீட்டையும் கோரும், ஆனால் அறுவடை தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் வருமானம் தரும். 
 ♦ முதலீடு: ஒரு ஏக்கருக்கு பந்தல் அமைத்தல், கன்றுகள் வாங்குதல், மற்றும் வேலிகளுக்கு சுமார் ₹1,50,000 முதல் ₹2,50,000 வரை செலவாகலாம். இதில் அதிகப்படியான செலவு பந்தல் கால் மற்றும் மூங்கில் கம்புகளுக்கே ஏற்படும்.
♦ லாபம்:  நட்ட 6 முதல் 8 மாதங்களில் அறுவடை தொடங்கும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து இலைகளைப் பறிக்கலாம். விலை வீழ்ச்சி அடையாத காலங்களில், ஒரு ஏக்கருக்கு மாதம் ₹40,000 முதல் ₹70,000 வரை நிகர லாபம் ஈட்ட முடியும். விசேஷ காலங்களில் (திருமணம், திருவிழாக்கள்) விலை பல மடங்கு உயரும் போது லாபம் இரட்டிப்பாகும்.  

➏. அரசு கடன் மற்றும் மானியம் விவரம்:

 தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தோட்டக்கலைத் துறை மூலம் வெற்றிலை விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகளை வழங்குகின்றன: 
♦ தோட்டக்கலைத் துறை மானியம்: 'தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்' கீழ் புதிய வெற்றிலை கொடிக்கால் அமைக்க 40% முதல் 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. 
♦ சொட்டுநீர்ப் பாசனம்: வெற்றிலைக்கு ஈரப்பதம் அவசியம் என்பதால், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. 
♦ கிசான் கிரெடிட் கார்டு (KCC): பயிர்க்கடன் திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் உதவி பெறலாம். 
♦ விற்பனை உதவி: உழவர் சந்தைகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்ய அரசு வழிவகை செய்கிறது.
♦ குறிப்பு: உங்கள் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகினால் தற்போதைய நடப்புத் திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

 ➐. FAQs (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்):

 🅐. வெற்றிலை பயிரிட எந்த மண் ஏற்றது?: நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில் தண்ணீர் தேங்கினால் வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம் உண்டு.
 🅑. ஒருமுறை நட்டால் எத்தனை ஆண்டுகள் பலன் தரும்?: முறையாகப் பராமரித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் பெறலாம். அதன் பிறகு மறுசுழற்சி செய்வது நல்லது. 
 🅒. வெற்றிலையைத் தாக்கும் முக்கிய நோய்கள் எவை?: வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் முக்கியப் பிரச்சனைகள். இதனைத் தவிர்க்க 'ட்ரைக்கோடெர்மா விரிடி' போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தலாம். 
 🅓. நிழல் வலை (Shade Net) அவசியமா?:    வெற்றிலை நேரடி வெயிலைத் தாங்காது. எனவே அகத்தி அல்லது கல்யாண முருங்கை போன்ற நிழல் தரும் மரங்களை ஊடுபயிராக வளர்ப்பது அல்லது நிழல் வலை அமைப்பது அவசியம். 
 🅔. விற்பனை வாய்ப்புகள் எப்படி உள்ளன?: உள்ளூர் சந்தைகள் தவிர, வெளிநாடுகளுக்கு (குறிப்பாக இலங்கை, ஐரோப்பா) ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

முடிவுரை:

     வெற்றிலை சாகுபடி ஒரு பழமையான தொழிலாக இருந்தாலும், சரியான திட்டமிடல், நவீன அணுகுமுறைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால், இது ஒரு நிலையான மற்றும் லாபகரமான சிறு தொழில் முயற்சியாக அமையும்.

     உங்கள் சிறு தொழில் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
     

கருத்துரையிடுக

0 கருத்துகள்